Friday, April 13, 2012

ஒரு நிமிடக் கதை



சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையில் தன் நான்கு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ரவி,வண்டியில் குளிரூட்டும் வசதி இருந்ததால் வெயிலின் கொடுமையை அவன் அறிந்திருக்கவில்லை.மேலும் தன் மனதில் ஒரு பெரிய காரியத்தை (கடமையை)முடித்த உணர்வுடன் இளையராஜாவின் இசையை ரசித்தவாறு சென்று கொண்டிருந்தான்.மேம்பாலத்தை அடுத்து வந்த சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிரவே தன் வண்டியை நிறுத்தினான்.சிக்னலில் வயதான மூதாட்டி ஒருத்தி நிற்கும் வாகனத்தில் உள்ளவர்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டே வந்தாள்..தன் வண்டியின் அருகில் அவள் வந்ததும் வாகன கண்ணாடியை கீழிறக்கி தன் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஓன்று எடுத்து நீட்டினான்..அதை வாங்கிக் கொண்ட மூதாட்டி" நல்லாருக்கணும் தம்பி உங்களை மாதிரி நல்ல புள்ளைய பெத்திருந்தா வயசான காலத்துல தனியா இப்படி கஷ்டபடுற நிலைமை வந்திருக்காது உன்னை பெத்தவங்க ரொம்ப புண்ணியம் பண்ணிருக்காங்க தம்பி" என்று வாழ்த்தியவாறு நகர்ந்தாள். மூதாட்டி கூறிய வார்த்தைகள் கூறிய ஈட்டியினை கொண்டு நெற்றிப் பொட்டில் அறைந்தார்போலாயிற்று.உடனே தன் தாயைக் கொண்டு விட்டுவந்த முதியோர் இல்லம் நோக்கி தன் வாகனத்தை திருப்பினான்.இப்பொழுது சூரியனின் உஷ்ணம் வெளியில் இருப்பதை விட வண்டியினுள் அதிகமாய் நிரம்பி வழிந்திருந்தது..வாகனத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

No comments:

Post a Comment