Saturday, April 28, 2012

சேதுராமனின் புலம்பல்கள்

சேது ராமன் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்.ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளாகின்றன.ஆனாலும் அவரது பணிகள் இன்றும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது வீட்டில் ஓய்வின்றி.தினசரி காலையில் பால் வாங்கி வருவது,காய்கறி வாங்கி வருவது என எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பார் சேதுராமன்..அவருக்கு குழந்தைகள் கிடையாது..அவரது மனைவி மீனாட்சி அவரது மாமன் மகள் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.ரத்த உறவுகளில் செய்த திருமணத்தினால் தான் குழந்தை பேரு வாய்க்கவில்லை என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர்.ஆனாலும் அதை நினைத்து இருவரும் கவலைப்பட்டதில்லை..மிகவும் சந்தோசமாக இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.சேது ராமன் எப்போதும் ஓய்வின்றி ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருப்பதில் மீனாட்சிக்கு மிகவும் பெருமை.இந்த வயதிலும் தன் வீட்டுக்காரரின் சுறுசுறுப்பை பற்றி பக்கத்துக்கு வீட்டு கோமதியிடம் பெருமை பேசாத நாளே கிடையாது..சேது ராமன் துப்புரவு பணியாளராக இருந்ததாலோ என்னவோ அவருக்கு எங்கேயும் எப்போதும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்ட ஒன்றாகிவிட்டது.அவர் இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப் படுவது நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் தான்..இந்த வயாதான காலத்தில் அவரால் கவலைப்பட மட்டும் தானே செய்ய முடியும் அதனால் அவர் அதை ஒழுங்காகவே செய்கிறார்..தினசரி தன் வேலை பொழுதுகளின் முடிவில் அருகிலிருக்கும் பூங்காவிற்கு தன் நண்பர் ரங்கசாமியுடன் சென்று உரையாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சேது..இன்றும் அது போல் பூங்காவிற்கு நடையை தொடங்கினார் சேதுராமன்.
அங்கே தன் நண்பர் ரங்கசாமி கல்நார்காலியில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தபடியே அவரருகில் சென்று என்ன? ரங்கு இப்டி விளையாடனும்னு ஆசையா இருக்குதா? வாயேன் விளையாடலாம் என்று அழைத்தார் சின்ன சிரிப்புடன்..ரங்குவோ உன் வயசுக்கு நீ விளையாடலாம் என்னைமாதிரி வயசானவங்க இப்ப விளையாட முடியுமாப்பா என நையாண்டியாக பதில் கூறினார்..அது சரி தான் என்றவாறு அவரருகில் அமர்ந்தார் சேது ராமன்..
என்ன சேது இன்னைக்கு என்ன விசேசம் ஏதும் செய்தி வச்சிருக்கியா? தினம் உங்கிட்ட இருந்து செய்தி எதாச்சும் கேக்கலைனா பொழுது போகமாட்டிக்குதுப்பா என்றார் ரங்கு.
அதான எப்போதும் என் பொலம்பல கேக்குறதுக்கு நீ ஒருத்தன் இருக்கியே அது போதும்..இன்னைக்கு காலைல பேப்பர பாத்ததிலருந்தே மனசுக்கு கொஞ்சம் சரி இல்லை ரங்கு..
ஏன் அப்படி என்ன போட்டிருக்கு?பேப்பர்ல, எதாச்சு கொலை,கொள்ளை,விபத்து பத்தி படிச்சியா?
தினம்தான் அது பத்தி செய்தி வருதே..இதை விட தினம் வர விளம்பரங்களை பாத்தா தான் நெஞ்சு பொறுக்கமாட்டிகுது ரங்கு என்றார்.
ஒ அது சரி அப்படி என்ன?செய்தி இன்னைக்கு?
நானும் இப்ப கொஞ்ச காலமா கவனிச்சிக்கிட்டு தான் வரேன் மக்களுக்கு விளம்பரத்து மேல மோகம் அதிகமாயிடுச்சி.எதுக்கெடுத்தாலும் விளம்பரம் விளம்பரம்னு விளம்பர பிரியர்களாகவே மாறிட்டாங்க மக்கள்..இன்னைக்கு காலைல பேப்பர்ல எதிர்கால இளஞ்சூரியனே வாழ்கநு ஒரு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கு விளம்பரம் போட்டிருக்காங்க..
எப்பா இது ஒரு குத்தமா?
அது இல்லைப்பா இது தலைவருக்காக அவரது பிறந்தநாளுக்காக கொடுக்கப்பட்ட விளம்பரமா தெரியலை..அவரது தொண்டர்கள் அவர்களுக்காகவே கொடுத்துகிட்ட விளம்பரம் மாதிரி தான் தோணுது.ஒரே ஆளுக்கு அஞ்சு அஞ்சு பேரு தனி தனியா அவங்களோட படம் போட்டு தலைவர் படம் போட்டு வாழ்க வாழ்க அஞ்சு பக்கத்துக்கு விளம்பரம் போட்டிருக்காங்க..இதுவாச்சும் பரவாயில்லை மகிழ்ச்சியான செய்தின்னு விட்டுரலாம் கண்ணிற் அஞ்சலியை கூட இப்டி விளம்பரமா பயன்படுத்துராங்கப்பா அதான் எரிச்சலா வருது..சரின்னு கடுப்புல பேப்பர மடிச்சி வச்சிட்டு காய்கறி வாங்க மார்க்கெட்டு பக்கமா நடந்து போறேன் அங்கயும் இதே கொடுமை பத்தடி தூரத்துக்கு ஒண்ணுனு ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிளையும் ஒரு பிளேக்ஸ் போர்டு வச்சிருக்கானுங்க எதிர்கால தமிழகமே வருக வருகன்னு..எத்தனை போஸ்டர் எத்தனை பிளேக்ஸ் போர்டுங்ர..
ஏன்பா சேது பெரிய தலைவர்கள்னா அப்படித்தான்பா வைப்பாங்க
அட நீ ஒன்னு நம்ம பெரியசாமி?அவர் போன தடவை அமைச்சரா இருந்தாரு இந்த தடவை தோத்துல போனாரு?அவரு வரதுக்குதான் இந்த விளம்பர போர்டுகல்லாம் வச்சிருகானுங்க..முன்னாள் அமைச்சருக்கெல்லாமா இப்டி பண்ணனும்?தேவை இல்லாம எதுக்கு இம்புட்டு காச வீணாக்குறாங்க தான் புரியலை..
ம்ம் அதுவும் சரிதான் என்பது போல் தலையசைத்தார் ரங்கு
ரெண்டுநாளைக்கு முன்னாடி நம்ம மார்க்கெட் வீதியிலே தார்சாலை போட்டாங்கல்ல?இப்ப போய் பாரு அதோட நிலைமையை,இந்தாளு வராருன்னு பிளெக்ஸ் போர்டு வைக்கிறதுக்குன்னு இரண்டு பக்கமும் இருபது குழிதோண்டி ரோட்ட பழைய படி பள்ளமும் மேடுமுமா மாத்திட்டானுங்க.இதுக்குல்லாம் அனுமதி கொடுக்கிற காவல்துறைக்கும்,அரசாங்கத்துக்கும் என்னைக்குதான் அறிவு வருமோ தெரியலை என்று கருத்துக் கொட்டினார் சேதுராமன்..
இப்ப மக்கள்கிட்ட இந்த கலாச்சாரம் ஒரு கட்டாய சம்பிரதாயம் போல தொத்திக்கிச்சினு நினைக்கிறேன்..காத்து குத்துலருந்து எந்த விழாவானாலும் சரி எளவு செய்தியானாலும் சரி பிளெக்ஸ் இல்லாம இருக்குறது இல்லை..இப்டி பிளெக்ஸ்ல கிடைக்கிற ஒரு நாள் விளம்பரத்துக்காக பலரும் காசை வீனாக்குராங்கபா..இருக்குறவங்க வீணாக்குனாலும் பரவாயில்லை இல்லாதவங்களுக்கும் இந்த மோகம் ஆட்டி படைக்குதுனா கவலைபடாம இருக்கமுடியுமா?அவங்களுக்கே தெரியலை இதுனாலே ஒரு பயனுமில்லை தண்ட செலவுதாணு..அதை நினைச்சி தான் மனசுக்கு கஷ்டமாவும் எரிச்சலாவும் இருக்குது என்று கூறி முடித்தார் சேதுராமன்.இதுக்கு செலவளிக்கிற காசை திருமண நிகழ்ச்சியா இருந்தா மணமக்களுக்கும் பொது நிகழ்ச்சியா இருந்தா நலிந்தோருக்கோ,ஆதரவற்றோருக்கோ,முதியோர் இல்லத்திற்கான உதவி தொகையாவோ கொடுக்கலாம்..நம்மால் பிறருக்கு செய்யப்படவேண்டிய உதவிகள் ஆயிரம் இருக்கு..அதை செய்ய யாரும் முன் வரதில்லை இது போன்ற பொழுது போக்கு ஆடம்பர செலவுகளுக்குன்னா மட்டும் பலரும் பங்கெடுத்துகிட்டு காசை வீணாக்குறாங்க ரங்கு என்றார் மிகவும் சோகத்துடன்..
"என்னங்க பால் வாங்க போக நேரமாச்சு வரிங்களா ?என்ற குரல் வந்த திசை நோக்கி திரும்பினார் வாசலில் மீனாட்சி..
இதோ வந்துட்டேன் என்றபடியே எழுந்து ரங்குவிடம் விடைபெற்று நகர்ந்தார்..
(தொடரும் புலம்பல்)

No comments:

Post a Comment